தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: புதுச்சேரியில் தபெதிக போராட்டம் - எடப்பாடி உருவபொம்மை எரிப்பு
துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து புதுச்சேரியில் தபெதிகவினர் போராட்டம் நடத்தியதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், காவல்துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதே போல, புதுச்சேரியிலும் காமராஜர் சாலை அருகே தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடந்தது.
பலியானவர்களுக்கு நீதி வேண்டி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே நேரம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த போராட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்களை போலீஸார் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போலீஸாருக்கும், தபெதிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சிலர் காயமடைந்தனர்.