ஓபிஎஸ்க்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்.. தொடர் போராட்டத்தால் லட்சுமிபுரத்தில் பதற்றம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் லட்சுமிபுரம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தில் 200 அடி ஆழம் கொண்ட 4 கிணறுகளை வெட்டியுள்ளார். இதனால் லெட்சுமிபுரத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம மக்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பணம் வசூலித்த கிராம மக்கள்
இதையடுத்து கிராம மக்களுக்கே நிலத்தையும் கிணறையும் அவர் விற்பனை செய்வதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நிலத்தை வாங்க கிராம மக்கள் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தானமாக வழங்கப்படும் என அறிவிப்பு
இந்நிலையில் கிணறை கிராம மக்களுக்கு தருவதாக கூறி வேறு நபருக்கு ஓபிஎஸ் நிலத்தை விற்பனை செய்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து கிணற்றை கிராம மக்களுக்கு ஓபிஎஸ் தானமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.
வேறு ஒருவருக்கு விற்பனை
அண்மையில் கூட ஓபிஎஸின் கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் கிணற்றை தருவதாக கூறி வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
லட்சுமிபுரத்தில் தொடர் போராட்டம்
இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்களிலும் லட்சுமிபுரம் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று குத்துவிளக்கு ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தால் பதற்றம்
ஓபிஎஸ் கிணற்றை வழங்கும் வரை தொடந்து போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்க்கு எதிரான கிராம மக்களின் தொடர் போராட்டத்தால் லட்சுமிபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.