காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும்.. குமரியில் நான்காவது நாளாக போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் மீனவர்களை மீட்கக்கோரி நான்காவது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நான்காவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போய் உள்ளனர். இவர்களை தேடும் பணியில் மத்திய மாநில அரசுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளன.
இன்னும் மீனவர்கள் பலர் மீட்கப்படாததாலும், மீனவர்களின் சடலங்கள் ஆங்காங்கே கரை ஒதுங்குவதாலும் கடலோர கிராமங்களில் மீனவ மக்கள் சோகமடைந்துள்ளனர். தங்கள் உறவினர்கள் பலர் இன்னும் கரை திரும்பாததால், சின்னத்துறை கிராமத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சின்னத்துறை கிராமத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நடக்கும் மீனவர்கள் போராட்டம், நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. மேலும், வள்ளவிளை மீனவ கிராமத்தில் இருந்து 20 விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்ற 223 மீனவர்கள் மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
அவர்களை மீட்கக்கோரியும் வள்ளவிளை கிராம மக்களும் அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறார்கள். ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் உவரி புனித அந்திரேயா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும்.. குமரியில் நான்காவது நாளாக போராட்டம் https://t.co/PdIDeU5N1W #FishermenProtest #Kanyakumari #KanyakumariProtest pic.twitter.com/si08NrB0G0
— Oneindia Tamil (@thatsTamil) December 12, 2017
அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக அஞ்சலி பேரணி சென்றனர்.