ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான கோட்டைக்காடு மக்கள் போராட்டம் வாபஸ்: கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் நடந்து வந்த ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் வாபஸ் பெறப்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைக்காடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நடந்து வந்த போராட்டம் இன்று முழுமையாக திரும்பப் பெறப்பட்டது.
கோட்டைக்காடு பகுதியில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. நேற்று போராட்டக் குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இன்று போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் மற்றும் சார்ஆட்சியர் அம்ரிஷ் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையில் ஆழ்துளை கிணறுகள் மூடப்பட வேண்டும், திட்டத்துக்காக மக்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலம் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பலவேறு கோரிக்கைகளை முன்னிருத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகமும் போராட்டக் குழுவினரும் நடத்திய பேச்சு வார்த்தையில், போராட்டக் குழு முன்வைத்த கோரிக்கைகள் ஒத்துக்கொள்ளப்பட்டன. அதன்படி, 1991-ல் ஹைட்ரோ கர்பன் எடுப்பதற்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படும். அரசு குத்தகைக்கு வாங்கிய நிலங்கள், திரும்ப உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்படும். மேலும் போராட்டக் குழு முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் 9 மாதங்களில் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், நெடுவாசல், நல்லாண்டர்கொல்லை உள்ளிட்ட 4 ஊர்களில் போராட்டம் இன்னும் நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் கணேஷ், நாளை நெடுவாசல் மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தீர்வு காண முயல்வோம் என்று கூறியுள்ளார்.