மதுரையில் லாரி மோதி கோரிப்பாளையம் தேவர் சிலை பீடம் சேதம் - சாலை மறியல்
மதுரை: மதுரையில் லாரி ஒன்று மோதியதில் தேவர் சிலை பீடம் சேதமானதால் அச்சமூகத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கோரிப்பாளையத்தில் பிரமாண்டமான, பிரபலமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள தேவர் சிலைகளிலேயே இதுதான் முக்கியமானது, முதன்மையானது.
இந்த நிலையில், அப்பகுதியில் வந்த தனியார் லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து அந்த சிலையின் பீடத்தின் மீது மோதியது. இதில் பீடம் சேதம் அடைந்ததால், அப்பகுதியில் அந்த சமூகத்தினர் பெருமளவில் கூட்டமாக கூடினர். அந்த வழியே வந்த பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறிந்து அறிந்த போலீசார் கோரிப்பாளையத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் மதுரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.