விஎச்பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் போர்க்களமான செங்கோட்டை
செங்கோட்டையில் ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
Recommended Video
நெல்லை: செங்கோட்டையில் ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்துக்குள் நுழைய பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ரத யாத்திரை தமிழகத்துக்குள் நுழைய தமிழக அரசு அனுமதி அளித்தது.
ரத யாத்திரைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததால் நெல்லை மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செங்கோட்டையில் ராமராஜ்ய ரத யாத்திரை தடுப்பு மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்க சென்ற மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் வேல்முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ரத யாத்திரை தமிழக கேரள எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் வழியாக தமிழகத்தை வந்தடைந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் போராட்டங்களால் செங்கோட்டைப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
144 தடை ஆணையையும் மீறி போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.