அம்பேத்கர் சிலை அவமதிப்பு.. நெல்லையில் திடீர் பதற்றம்.. போலீசார் குவிப்பு
நெல்லையில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை: அம்பை அருகே அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு பதற்றம் உருவாகியுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அம்பையிலிருந்து பிரம்மதேசம் செல்லும் வழியில் சாலையோரத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இரவில் மர்ம நபர்கள் சிலர் இச்சிலையை அவமதிப்பு செய்துள்ளனர். அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே, இதே போன்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட போதும், அவமதிப்பு செய்யப்பட்ட போதும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இதனால், தற்போது குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே போராட்டம் கை விடப்படும் என அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
அப்போது, இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் யார் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். மேலும், அவமதிப்பு செய்யப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசாரே சுத்தம் செய்வதாக கூறினார்கள். அதனை கிராம மக்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு எஸ்பி விக்ரமன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.