தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்... விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்
தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததாக விஜயேந்திரருக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆங்காங்கே அவரது உருவபொம்மைகள் எரிக்கப்படுகின்றன.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பாஜகவின் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரனின் நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விஜயேந்திரருக்கு தனிமேடை அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்கு ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்ற போதும் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அரசியல் தலைவர்கள்...
தமிழகம் முழுவதும் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்களும் கண்டனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. தஞ்சையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் விஜேயந்திரரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் சங்கர மடத்தை முற்றுகையிட போவதாக வந்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.
திராவிடர் விடுதலை கழகம்
இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள சங்கர மடத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டனர். அப்போது சங்கர மட நிர்வாகத்துக்கும் தமிழ் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல் சேலம் மரவனேரியில் உள்ள சங்கர மடத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் எந்த வித முன்அறிவிப்பும் இன்றி திடீர் என மக்கள் கலை இலக்கிய கழகத்தினரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரும் திரண்டனர்.
கண்டன கோஷம்
கைகளில் விஜயேந்திரர் உருவ படத்தை எடுத்து கொண்டு அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் பெரியார் சிலை முன்பு வந்த அவர்கள் அங்கு விஜயேந்திரர் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் அவமதிப்பு செய்தனர்.
திடீர் போராட்டத்தால் பரபரப்பு
அதன் பின்னர் அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் விஜயேந்திரர் உருவ படத்தை கொளுத்தினர். திடீர் என இந்த போராட்டம் நடைபெற்றதால் இதனை காவல்துறையினர் எதிர்பார்க்கவில்லை. எனவே போராட்டம் நடைபெற தொடங்கி நீண்ட நேரத்திற்கு பின்னரே அங்கு காவல்துறையினர் வந்து உருவ படங்களை பறிக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.