ரிசர்வ் வங்கியை கண்டித்து சென்னையில் ரூ. 10 நாணய மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் ரிசர்வ் வங்கியை கண்டித்து சென்னையில் பால் முகவர்கள் போராட்டம் நடத்தினர். 10 ரூபாய் நாணயங்களை மாலையாக போட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க ரிசர்வ் வங்கி மறுப்பதாக வெளியான தகவலை அடுத்து பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது 10 நாணயங்களை மாலையாக போட்டுக்கொண்டு ரிசர்வ் வங்கிக்கு எதிரகா அவர்கள் முழக்கமிட்டனர்.
மத்திய அரசு பணமதிப்பு ரத்து நடவடிக்கையை கடந்த நவம்பர் 8ஆம்தேதி மேற்கொண்டது. இதனால் நாட்டில் 10 ரூபாய் நாணயங்களின் புழக்கம் அதிகரித்தது.
இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தகவல் பரவியதால் பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டினர். ரிசர்வ் வங்கியும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக தகவல் வெளியானது.
ரிசர்வ் வங்கியை கண்டித்து போராட்டம்
இதனைக் கண்டித்தும் ரிசர்வ் வங்கியை மீண்டும் 10 ரூபாய் நோட்டுகளை வாங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் சென்னை ரிசர்வ் வங்கி அருகே போராட்டம் நடத்தினர். அவர்கள் ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை வாங்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர்.
நாணயங்களை மாலையாக அணிந்து வந்தனர்
மேலும் 10 ரூபாய் நாணயங்களை மாலையாக போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளிக்க ரிசர்வ் வங்கி இலவச தொலைப் பேசி எண்ணை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாணயங்கள் கொட்டப்படும்
10ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ரிசர்வ் வங்கியின் முன்பு 10 ரூபாய் நாணயங்களை கொட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வதந்தைகளை நம்பவேண்டாம்
இதனிடையே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்
வதந்திகளை புறக்கணித்து மக்கள் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. தவறான தகவல்களை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம் என ரிசர்வ் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.