பசுவதை தடை சட்டத்தை கண்டித்து 18ம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!
பசுவதை தடுப்பு சட்டத்தைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
சென்னை: பசுவதை தடுப்பு சட்டத்தைக் கண்டித்து வரும் 18ஆம் தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. இதில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை அறிவிப்பை தொடர்ந்து 32 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் செயலை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., கண்டன உரை நிகழ்த்தினார்.
32 பேர் கொலை
ஆர்ப்பாட்டத்தின் போது காதர் மொகிதீன் பேசியதாவது, ஜுன் 22ம் தேதி அரியானவுக்கு பல்லாப்கர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சி உண்பவன் என்று ஹாபிஸ் ஜுனைத்தை படுகொலை செய்தனர். நாடு முழுவதும் 32 உயிர்களை படுகொலை செய்திருக்கிறார்கள். அதை கண்டிக்கும் வகையில் இந்தியா முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பேணி காக்கின்ற எல்லா தரப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போடப்பட்டுள்ள பசுவதை தடை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஜந்தர்மந்தரில் 18ஆம் தேதி
இதைத்தொடர்ந்து காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசு ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து இன்று மனிதனை கொன்றிருக்கிறார்கள். இந்த செயலை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பல்வேறு மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. டெல்லியில் வரும் 18ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
சரித்திரத்தை மாற்ற சூது, சூழ்ச்சி
இதில் மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கயிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசு சமய நல்லிணக்கத்திற்கு எதிராகவும், பாரம்பரிய பண்பாட்டை, சரித்திரத்தை மாற்ற சூது, சூழ்ச்சிகளை செய்கிறது. நாட்டு மக்கள் இதற்கு அடிபணிய மாட்டார்கள்.
துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்
அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய மாநில அரசுகள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் அனைவரையும் பாதுகாக்கக்கூடிய கடமை அரசுகளுக்கு உள்ளது. உடனடியாக பசுவதை தடை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று சமய நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜுனைத் குடும்பத்திற்கு நிதியுதவி
அரியானாவில் படுகெலை செய்யப்பட்ட ஹாபிஸ் ஜுனைத் குடும்பத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதியும், அவர் தந்தை வாடகை கார் வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு புதிய காரையும் வழங்க இருக்கிறோம். இவ்வாறு காதர் மொகிதீன் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவரும், மாநில பொதுச்செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்,கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யது சாதிக் அலி தங்ஙள், தமிழக மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.