சிஎஸ்கே யூனிஃபார்ம் போட்ட ரசிகர்களை விரட்டி விரட்டி வெளுத்த போராட்டக்காரர்கள்
அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வழியாக சிஎஸ்கே யூனிஃபார்ம் போட்டு சென்ற ரசிகர்களை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்வழியாக சிஎஸ்கே யூனிஃபார்ம் போட்டு சென்ற ரசிகர்களை விரட்டி விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களா அல்லது போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் நுழைந்த சட்டவிரோத கும்பலா எனத் தெரியவில்லை.
சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் உட்பட பலரும் சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சென்னை அண்ணாசாலை ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்கள் சிஎஸ்கே யூனிஃபார்ம், டிக்கெட் உள்ளிட்டவற்றை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
விரட்டியடித்தனர்
மேலும் போட்டியை காணவந்த ரசிகர்களை மிரட்டி விரட்டியடித்தவர்கள் சிஎஸ்கே யூனிஃபார்ம் அணிந்திருந்த பல ரசிகர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.
ஓட்டம் பிடித்த ரசிகர்கள்
ஆடையை கழட்டி எறிந்துவிட்டு ஓடுமாறு கூறி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என கதறிய ரசிகர்கள் ஆடைகளை கழட்டி எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
லேசான தடியடி
அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும் கற்கள், குழாய்கள், மற்றும் பதாகைகளை போராட்டக்காரர்கள் வீசினர். போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த போலீஸார் போராட்டக்காரர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.
போராட்டக்காரர்கள் என்ற போர்வையில்
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்கள் போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் நுழைந்த வேறு ஏதேனும் கும்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.