லாரன்ஸ் பேச்சைக் கேட்க மறுத்த போராட்டக்காரர்கள்?
சென்னை: வரலாறு காணாத அறவழிப் போராட்டமாகத் திகழ்ந்த மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம், இன்று வேறு வழியில் திரும்பி பெரும் வன்முறைக்கு வித்திட்டுள்ளது.
போலீசாரின் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு போன்றவை போராட்டக் களத்தில் நின்ற மாணவர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 7 நாட்களாக மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மெரினா வந்தார்.
ப்போது, 'போராட்டத்தில் வெற்றி அடைந்ததை கொண்டாட வேண்டிய நேரமிது. தயவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கலைந்து செல்லுங்கள்.. நாம் வெற்றிப் பெற்றுவிட்டோம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்,' என்று கூறினார்.
மேலும், 'மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீஸ் மன்னிப்பு கேட்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீது வழக்குப் போடக் கூடாது. வழக்குப் போட்டிருந்தால் அதை ரத்து செய்யுங்கள்., போலீஸ் செயலால் காயம் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சட்ட முன்வடிவு நகல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்,' என்று பேசினார்.
ஆனால் லாரன்ஸ் பேசிய பிறகும் போராட்டக்காரர்கள் திருப்தியடையவில்லை. எனவே கலைய மறுத்து அங்கேயே அமர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.