ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ குழு வாகனத்தை விரட்டியடித்த பொதுமக்கள்- பேனர் எரிப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட வலியுறுத்தி தொடருகிறது போராட்டம்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனத்தை கிராம மக்கள் சிறைபிடித்து விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை இழுத்து மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் 45-வது நாளாக இன்றும் போராட்டம் தொடருகிறது.
அதேபோல் தற்போது மாணவர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். தன்னெழுச்சியாக மாணவர்கள் நேற்று போராட்டங்களை நடத்தினர்.
இதனிடையே முத்தையாபுரம் அத்திமரப்பட்டி கிராமத்துக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சொந்தமான நடமாடும் மருத்துவ குழு வாகனம் நேற்று சென்றது. 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்த நடமாடும் மருத்துவ குழு வாகனம் அங்கு வரும்.
ஆனால் இந்த முறை அத்திமரப்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஸ்டெர்லை நிறுவனத்தின் அந்த வாகனத்தை சிறைபிடித்தனர். 'புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மருத்துவ உதவி எங்களுக்கு தேவை இல்லை' எனக் கூறி அந்த வாகனத்தை விரட்டி அடித்தனர்.
அத்துடன் அத்திமரப்பட்டி கிராமத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இந்த மருத்துவ குழு வருகை தொடர்பாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதையும் பொதுமக்கள் ஆவேசத்துடன் கிழித்தெறிந்து தீ வைத்து எரித்தனர்.