திண்டுக்கல்லார் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்!
பழமொழியை திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி கூறியுள்ளார்.
மதுரை: பழமொழியை மாற்றி பேசி கலாய் வாங்கி வருகிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.
திமுக, அதிமுகவை கட்டிக்காத்த தலைவர்கள் கருணாநிதி ஆகட்டும், எம்ஜிஆர் ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும்... சட்டப்பேரவையில் பேசும்போதெல்லாம் குறிப்பே எடுத்து வைத்து கொள்ளாமல் அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களுடன் பேசி அசத்தி விடுவார்கள். ஒரு தடவை கூட இவர்கள் உளறியதாக சரித்திரமே இல்லை.
பேஷனாகிவிட்டது
அதேபோல, இவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் பேசுவதானாலும் சரி தங்கள் அரசியல் அனுபவங்களை அப்படியே கவனமாகவும் அதே சமயத்தில் சரளமாகவும் பேசினார்கள். ஆனால் தற்போதுள்ள "தலைவர்கள்" எப்படி இருக்காங்க தெரியுமா.. வாயைத் திறந்தாலே உளறல்தான் கொப்பளிக்கிறது. குறிப்பாக அமைச்சர்கள் சிலர் முன்னுக்கு பின் முரணாக பேசுவது, மேடையில் அமர்ந்திருப்பவர்களின் பெயரை மாற்றி சொல்வது என வழக்கமாக்கி விட்டனர். பேஷனாக்கி விட்டனர்.
இட்லி சாப்பிட்டார்
இதில் செல்லூர் ராஜூக்கு அடுத்தபடியாக இப்படி பேசுவது திண்டுக்கல் சீனிவாசன்தான். ஒருமுறை ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தினகரனிடம் இருக்கிறது என்றார். ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய் எங்களை மன்னித்து விடுங்கள் என்றார். பிறகு அதற்கும் ஒரு படி மேலே போய் முன்னாள் பிரதமரும், அதுவும் இறந்து போன நரசிம்மராவுடன், துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுவார் என்றார்.
யானை படுத்தாலும்...
அரசியல் விவகாரங்கள் குறித்த பேச்சுதான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் பழமொழியும் தவறாகவே சொல்கிறார். நேற்று திருப்பரங்குன்றம் சைக்கிள் பேரணியில் பேசும்போதும், "யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... எழுந்தாலும் ஆயிரம் பொன்... என்பார்கள். அதுபோல உடல் நலக்குறைவால் மறைந்திருந்தாலும் புறநானூற்று வீரர் போல ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உற்சாகமாக எழுந்து வந்து விட்டார்" என்றார்.
தொண்டர்கள் அதிர்ச்சி
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.... இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் என்பதுதான் பழமொழி. ஆனால் காலங்காலமாக நாம் கூறப்பட்டு வரும் பழமொழியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் "யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... யானை எழுந்தாலும் ஆயிரம் பொன்" என்று பழமொழியை மாற்றி பேசியது அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெரிந்துதான் பேசுகிறார்களா?
இதையெல்லாம் இவர்கள் தெரிந்து செய்கிறார்களா இல்லை எப்படியாவது நம்ம பெயர் மீடியாவில் வந்தால் போதும் என்ற நோக்கில் பேசுகிறார்களா.. இப்படியே போயிட்டிருந்தா எப்படிங்க.. ஏதாச்சும் சட்டுப்புட்டுன்னு முடிவுக்கு வாங்க!