கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்.. பி.ஆர்.பி. வக்கீல் அதிரடி கோரிக்கை
மதுரை: நரபலி புகார் கொடுத்த டிரைவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும் என்றும், கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என்றும் பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் வழக்கறிஞர் அன்புச்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, பிஆர்பி கிரானைட் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுத்ததாக அதில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியான் என்பவர் சகாயத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், மதுரை அருகே சின்னமலம்பட்டியில் இன்று சேவற்கொடியான் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை 5 எலும்புத் துண்டுகள் அங்கு மீட்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், பிஆர்பி கிரானைட் நிறுவன வழக்கறிஞர் அன்புச்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். சகாயத்தை விட சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்' என்றார்.
மேலும், நரபலி புகார் அளித்த டிரைவர் சேவற்கொடியானிடம் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.