நரபலி விவகாரம்... பி.ஆர்.பழனிச்சாமியை துருவித் துருவி விசாரித்த மதுரை போலீஸ்
மதுரை: மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கி் பிஆர்பி கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமியிடம் மேலூர் கீழவளவு போலீஸார் ஐந்தரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தினர் மன நலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்து சுடுகாட்டில் புதைத்ததாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் ஐஏஎஸ்ஸிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் குறிப்பிட்ட இடத்தை தோண்டிப் பார்த்தபோது நான்கு எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்தார் சகாயம்.
அதன் பேரில் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பி.ஆர். பழனிச்சாமி, ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு, ஜே.சி.பி. டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேர் மீது தடயங்களை அழித்தல், சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக கீழவளவு போலீசில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதை ஏற்று கடந்த 15ம் தேதி ஜோதிபாசு, அய்யப்பன் இருவரும் போலீசில் ஆஜரானார்கள். 16ம் தேதி டிரைவர் பரமசிவம் ஆஜரானார். இவர்கள் அனைவரும் விசாரணைக்குப்பின் அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அவர்களது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.
நேற்று பிற்பகலில் பி.ஆர்.பி. ஆஜரானார். அவருடன் 3 வக்கீல்களும் வந்தனர். பி.ஆர்.பியிடம் கூடுதல் எஸ்.பி மாரியப்பன், டிஎஸ்பி மங்களேஸ்வரன், தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 8 மணியளவில் விசாரணை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டார் பழனிச்சாமி.