சகாயத்தைச் சுற்றி மாபியா கும்பல் உள்ளது.. பி.ஆர்.பி. கிரானைட்ஸ் வக்கீல் போடும் போடு
மதுரை: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு குவாரி முறைகேடுகள் குறித்து விசாரிக்க மட்டுமே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே தவிர பி.ஆர்.பி கிரானைட்ஸ் தொடர்பாக விசாரிக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று பி.ஆர்.பி. நிறுவன செய்தித் தொடர்பாளரும், வக்கீலுமான வி.ஆர். மனோகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தை விசாரிக்க சகாயத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. அது அவரது வேலையும் அல்ல. மேலும், கிரிமினல் வழக்குகளை அவர் விசாரிக்க முடியாது. போலீஸையும் தனது விசாரணைக்கு அவர் பயன்படுத்த முடியாது.
அவர் ஒரு காலத்தில் நேர்மையான அதிகாரியாக இருந்தவர்தான். ஆனால் இப்போது இல்லை. இப்போது அவரைச் சுற்றி ஒரு மாபியா கும்பல் உள்ளது. அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள். இப்பகுதியில் எங்களுக்குப் போட்டியாக உள்ள தொழில்முறைப் போட்டி நிறுவனங்கள்தான் சகாயத்தை இயக்கி வருகின்றனர்.
சேவற்கொடியான் சொல்வதையெல்லாம் நம்பி இப்படி சோதனையில் ஈடுபடுவது தவறானது. அவர் இதற்கு முன்பு எங்களது நிறுவனம் மீது நான்கு வழக்குகளைப் போட்டார். மதுரையில் மட்டும் 40 வழக்குகளில் அவர் சாட்சியாக உள்ளார். அவர் கூறுவது அனைத்தும் பொய் என்று கூறினார் மனோகரன்.
மனோகரன், பிஆர்பி கிரானைட்ஸ் தொடர்பான 150 வழக்குகளில் வக்கீலாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.