கிரானைட் கொள்ளை: பி.ஆர். பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு போட்டவரின் காருக்கு தீவைப்பு
மதுரை: பி.ஆர்.பி கிரானைட் குவாரி நிறுவனர் பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளித்த முருகேசன் என்பவரின் காருக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மேலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி மீது மதுரை செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு முருகேசனுக்கு பல மிரட்டல் போன்கள் வந்தன. இதைதொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவரது வீட்டிக்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திலேயே போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென்று வெடிக்கிற சத்தம் கேட்டது. பதற்றமடைந்தவர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடிவந்தனர். அப்போது வீட்டு முன்பு நின்ற முருகேசனின் கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். போலீஸ் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பி.ஆர்.பி.க்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் காருக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை தயாரித்து வருகின்றனர். நரபலி புகார்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிலமாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் பி.ஆர்.பழனிச்சாமி. இந்த நிலையில் பி.ஆர்.பி மீது புகார் கொடுத்தவரின் வீட்டில் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.