தேர்தல்.. தேர்தல்... தமிழகத்தில் 8 எஸ்.பிக்களுக்கு டிஐஜி பதவி
சென்னை: தமிழக காவல்துறையில் இருந்து 8 காவல்துறை கண்காணிப்பாளர்கள், டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், சென்னைக்கு புதிய இணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரி பவானீஸ்வரி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் ஜோஷிநிர்மல்குமார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, சென்னை வடக்கு இணை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.
சென்னை வடக்கு இணை போலீஸ் கமிஷனர் தினகரன், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பன்னீர்செல்வம், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் நாகராஜன், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். சென்னை மேற்கு இணை கமிஷனர் நஜ்முல்ஹோடா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். சென்னை கமாண்டோபடை சூப்பிரண்ட் சந்தோஷ்குமார் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, சென்னை மேற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் சீருடை பணியாளர் தேர்வாணய சூப்பிரண்ட் கயல்விழி, சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு இணை போலீஸ் கமிஷனர் அருண், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை சரக டி.ஐ.ஜி.அன்பு,சென்னை தெற்கு இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார். சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ரூபேஸ்குமார் மீனா,சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் சரக டி.ஐ.ஜி.வித்யா ஜெயந்த்குல்கர்னி, சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டு தேன்மொழி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சி.பி.ஐ.போலீசில் தொடர்ந்து அவர் பணியாற்றுவார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பாதுகாப்பு பிரிவு உதவி ஐ.ஜி.யாக பணியாற்றும் கபில்குமார் சரத்கார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றுவார்.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல் செயலாளராக பணியாற்றும் டாக்டர் கண்ணன், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.