நர்சிங் படித்து விட்டு வைத்தியம் பார்த்த போலி டாக்டர் ஜோலி.. திருப்பூரில் கைது - வீடியோ
நர்சிங் படிப்பு படித்துவிட்டு திருப்பூரில் மருத்துவர் போல் சிகிச்சையளித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஜோலி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: எம்பிபிஎஸ் டாக்டர் என்றுகூறி திருப்பூரில் தனியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் சூர்யா நகரில் கேரளாவிலிருந்து வந்து தனியாக வீடு பிடித்து ஜோலி என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். அவர் தன்னை எம்.பி.பிஎஸ் டாக்டர் எனக் கூறி வைத்தியம் பார்த்து வந்ததால் அவரிடம் பலர் சிகிச்சைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சைக்கு சென்ற பலருக்கு நோய் குணமாகாமல் இருக்கவே அவர்களில் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது.மேலும் ஜோலி கொடுத்த மாத்திரைகள் கெடு தேதி முடிவடைந்தவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களில் சிலர் போலீசாருக்கு புகார் கொடுக்க, போலீசார் ஜோலியிடம் விசாரணை செய்துள்ளனர்.
அதில் ஜோலி தான் நர்சிங் படித்தவர் என கூறியுள்ளார். இதையடுத்து போலி மருத்துவரான ஜோலியை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட ஊர்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்களை சுகாதரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் எங்கும் டெங்குக் காய்ச்சல் பரவி வரும் வேளையில் போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் பல நோய்கள் பரவுவதற்கும் நோயாளிகளின் இறப்புக்கும் காரணமாக அமைகிறது என்பதால் இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.