தமிழர் பிரச்சினைக்காக ஜி.ரா.வை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று திடீரென சந்தித்து பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுகள் மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பதவியேற்பு விழாவே முடிந்திருக்கக் கூடும். இந்த நிலையில் தமிழக அரசியல்களம் கொதிநிலையை எட்டியுள்ளது.
நேற்றைய பகைவன் இன்றைக்கு நண்பன், இன்றைய நண்பன் நாளைய பகைவன் என்கிற ரீதியில் அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.
விஜயகாந்த் அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசியதோடு டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்தார். அதேபோல டாக்டர் கிருஷ்ணசாமியும், திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி ஜி.கே.வாசன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுக்க ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார்
'தமிழர் பிரச்சனைக்காக' அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இயக்கம் அமைக்க கிருஷ்ணசாமி சந்தித்து பேசிவருகிறார். இந்த சந்திப்பும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் என்று கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜி.ராமகிருஷ்ணனை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்தநிலையில் கிருஷ்ணசாமி சந்தித்து பேசியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.