ஸ்ரீவைகுண்டத்தில் பு.த. பிரமுகர் படுகொலை... பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகர் கைது - பதற்றம்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (28), புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்த இவர், பிப்ரவரி 23ஆம் தேதி, மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஸ்கரின் உறவினர்கள் 4 நாட்களாக போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை 24ஆம் தேதிக்கு மாஜிஸ்ட்ரேட் சங்கர் ஒத்தி வைத்தார். பின்னர் சுரேஷ் பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சுரேஷ் ஆஜர்படுத்தப்படுவதையறிந்த அவரது ஆதரவாளர்கள் சிலர் நீதிமன்றம் முன்பு குவிந்திருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகலாத வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.