இப்போ இது தேவையா.. திமுக ரயில் மறியல் போராட்டத்தால் மக்கள் அதிருப்தி!
திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் அமைதியாக போராடி வரும் நிலையில் திமுகவினர் ரயிலை மறித்ததால் மக்கள் அதிருப்தியடைந்ததைக் காண முடிந்தது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஒருபக்கம் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மக்களைப் பாதிக்கும் வகையிலான ரயில் மறியல் போராட்டம் திமுகவுக்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றுத் தர தவறி விட்டது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் இளம்பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து டெல்லி விரைந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அங்குள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் என்று கூறினார்.
போராட்டத்தை தொடரும் மாணவர்கள்
மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும் வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசியல்வாதிகளுக்கு இடமில்லை
மாணவர்களின் போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடமில்லை என முழக்கமிட்டனர். இதையடுத்து ஸ்டாலின் போராட்டக்குழுவை சந்திக்காமல் திரும்பினார்.
திமுக ரயில் மறியல்
இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதால் திமுக தனியாக போராட்டம் நடத்த முடிவு செய்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
தனியாக போராடிய திமுக
திமுகவின் இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டத்ததை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டத்தில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளாததால் மாணவர்களுக்கு போட்டியாக திமுக தனியாக போராட்டம் நடத்தியதாகவும் பொதுமக்கள் குற்றம் குற்றம்சாட்டினர்.
சென்னையில் மக்கள் அவதி
சென்னையில் ரயில்கள் மறிக்கப்பட்டதால் காலையில் அலுவலகம் சென்றோர் பெரும் அவதிக்குள்ளாகினர். மாணவர்களே அமைதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஏன் மக்களை சிரமப்படுத்துகின்றனர் என்று அவர்கள் கூறியது திமுகவினர் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.