தொடரும் காவல்துறையினரின் அத்துமீறல்.. பரிதாபமாக பறிபோகும் அப்பாவி உயிர்கள்!
காவல்துறையினரின் அத்துமீறலால் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பரிதாபமாக பறிபோவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: காவல்துறையினரின் தொடர் அத்துமீறலால் அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பரிதாபமாக பறிபோவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிக்க வைக்கிறது.
வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்டு போக்குவரத்து போலீசார் பெரும் தொல்லை கொடுத்து வருகின்றனர். அதிகார திமிரால் எந்த உச்சத்துக்கும் செல்லலாம் என்ற போலீசாரின் நடவடிக்கைகள் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பறித்து வருகிறது.
வைரலாகும் வீடியோக்கள்
உயிர்க்காக்கும் ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றை அணியவில்லை எனக்கூறி போலீசார் பொதுமக்களின் உயிரை குடிப்பது வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையினர், போக்குவரத்து காவலர்கள் லஞ்சம் வாங்கும் காட்சிகள், தகாத வார்த்தையால் பேசுவது, விரட்டிச் சென்று தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குடல் சரிந்து பலியான இளைஞர்
ஆனாலும் காவல்துறையினரின் இந்த முரட்டுத்தனத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை கேகே நகரில் போலீசார் விரட்டியதில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் ஒருவர் குடல் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
லத்தியால் தாக்கிய போலீஸ்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் அண்மையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டினர். இதை செல்போனால் படம் பிடித்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் லத்தியால் தாக்கினர்.
இலவச உணவு கேட்டு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இலவச உணவு கேட்டு ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
தீக்குளித்த ஓட்டுநர்
தரமணியில் கடந்த மாதம் 21-ம் தேதி சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் மணிகண்டனை போலீசார் ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கினர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் போலீசார் முன்னிலையில் தீக்குளித்து உயிரிழந்தார்.
லாரியில் சிக்கிய இளைஞர்
இதைத்தொடர்ந்து சென்னை அம்பத்தூர் பகுதியில் ஹெல்மட் அணியாமல் சென்ற இளைஞரை போலீசார் விரட்டி சென்றதில் லாரியில் சிக்கி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்ப்பிணி பெண் பலி
இந்நிலையில் நேற்று மாலை ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து உஷா என்ற கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே பலியானர். அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது.
அரசுக்கு கோரிக்கை
போலீசாரின் இந்த கொலை வெறி நடவடிக்கைகள் பொது மக்களிடையேயும் வாகன ஓட்டிகளிடையேயும் மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.