இறந்ததாக கூறிய குழந்தை.. "உயிர்த்தெழுந்து" மீண்டும் இறந்த பரிதாபம்.. மருத்துவமனை முற்றுகை!
கரூர்: கரூர் தனியார் மருத்துவமனையில் பிறந்து உயிரோடு இருந்த குழந்தையை இறந்துவிட்டது என மருத்துவர் கூறியதையடுத்து இறுதி சடங்கிற்கு குழந்தைகள் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இறுதிச் சடங்கின் போது உயிர் இருந்தது தெரிய வந்ததையடுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரை அடுத்த ஜகதாபியை சேர்ந்தவர் கனேசன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களூக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தகள் உள்ளன. கணேசன் தனியார் பஸ் பாடி கட்டுமான தொழிலில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்து நேற்று பிரசவத்திற்க்காக கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு குறை பிரசவத்தில் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனிடையே மருத்துவர் ஒருவர் குழந்தையைப் பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக கூறினார் என கூறப்படுகிறது. இதனை அடுத்து இறந்த குழந்தையை எடுத்து கொண்டு அவர்கள் சமுதாய வழக்கப்படி குழந்தைக்கு காது குத்தி அடக்கம் செய்வது வ்ழக்கம். அப்படி செய்யும் போழுது குழந்தை வலி தாங்க முடியாமல் அழுதது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் வைத்து விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மருத்துவர்கள் வந்த உடன் சிகிச்சை மேற்கொள்வதாக பல மணி நேரம் அலைக்கழித்துள்ளனர்.
இதனால் அக்குழந்தை பரிதாபமாக, நிஜமாகவே உயிரிழந்து விட்டது. இதை கண்டு ஆத்திரமடைந்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இச்சம்பவம் அறிந்த கரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததன் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.