தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் சிறையில் அடைப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணியை எதிர்த்துப் போராடியவர்களில் 8 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது அந்த ஆலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தாமிர உருக்காலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலையின் அருகில் உள்ள அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் நேற்று முன் தினம் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுனர்.
இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், மக்களின் சுகாதார நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களிடம் சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து நள்ளிரவிலும் போராட்டம் தொடர்ந்தது.
அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 271 பேரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பேராசிரியர் பாத்திமா பாபு உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவையடுத்து அவர்கள் 8 பேரும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.