புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்: முட்புதர்களில் சிதறியுள்ள கற்சிலைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!
அரசு அருங்காட்சியகத்தை உடனடியாக பராமரித்து சிலைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் கிபி 2 மற்றும் 3ம் நூற்றாண்டு கால சிறப்பு வாய்ந்த 100க்கும் மேற்பட்ட கற்சிலைகள் பாதுகாப்பில்லாமல் முட்புதர்களில் கிடப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் என்பது தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய அருங்காட்சியகம் என்ற பெருமைக்கு உரியது. நூற்றாண்டு கால அருங்காட்சியகத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க சிலைகள் ஆங்கிலேயர் மற்றும் மன்னர் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய அரிய வகை போர்கருவிகள் மற்றும் பொருட்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிதறிக் கிடக்கும் முட்புதர்கள்
மேலும் பலவித பறவைகள் விலங்கினங்கள் ஆகியவையும் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் கிபி.2 மற்றும் 3ம் நூற்றாண்டு காலங்களில் கால கற்சிலைகள் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 100க்கும் மேற்பட்ட கிபி.2ம் நூற்றாண்டு கால கற்சிலைகள் தற்போது தகுந்த பாதுகாப்பு இல்லாமல் முற்புதர்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
கலைநயத்துடன் சிலைகள்
இவை அனைத்துமே தமிழகம் முழுவதும் வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை என்பதனாலும், இவைகளை தமிழக அரசு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலும் வழங்கப்பட்டது. மேலும் கற்சிலைகள் மிகவும் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டதாக உள்ளது.
புதர்களில் சிலைகள்
பல சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்தும் உடைந்தும் போய் உள்ள நிலையில் முட்புதர்களில் வீசி எறியப்பட்டுள்ளது. இது வரலாற்று ஆய்வாளர்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருங்கால சந்ததியினர் இளம் தலைமுறையினர் நமது நாட்டின் பழக்கவழக்கங்கள் வரலாற்று நிகழ்வுகள் மட்டுமல்லாது பழங்கால பொருட்கள் சிலைகள் சின்னங்கள் ஆகியவற்றை இது போன்ற அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டும்.
உடனடி பராமரிப்பு அவசியம்
எனவே தமிழக தொல்லியல்துறை சார்பில் இந்த சிலைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அருங்காட்சியத்திற்கு தமிழகத்தின் பல மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலத்தவர்களும் வருகை தந்து பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் அருங்காட்சியகத்தின் சிறப்பு குறித்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களின் விளக்கம் தருவதற்கு ஏதுவாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.