ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுங்க.. மயிலை எம்.எல்.ஏ. நடராஜ் அலுவலகம் முற்றுகை
மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். அவர்கள் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு இடையேயான அதிகாரப் போட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்கள் அரசியல் கட்சியினர் எம்எல்ஏக்கள் என அனைத்து தரப்பினரும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவளித்து வருகின்றனர்.
பொது மக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவளிக்கக்கோரி அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தை அப்பகுதி அதிமுகவினர் திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது முதல்வர் ஓபிஎஸை ஆதரிக்க வேண்டும் என முழக்கமிட்டு அவர்கள் வலியுறுத்தினர். எம்.எல்.ஏ. நடராஜ் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென் சென்னை தெற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மொசைக் வே.ஜெகதீஸ் தலைமையில் அபிராமபுரம, சி.பி.ராமசாமி சாலையில் உள்ள நடராஜ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நட்ராஜ் யார் அணியிலும் இல்லை என்று நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.