"தூய்மையான ஆறு போடும் நமக்கு சோறு".. செய்யாற்றை சீரமைக்க களத்தில் குதித்த பொது மக்கள்
செங்கம் செய்யாற்றை சீரமைக்கும் பணியில் அந்த பகுதி பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள செய்யாற்றில் தூய்மைப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. அந்த பகுதி பொது மக்கள், இளைஞர்கள் இணைந்து ஆற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் செய்யாறு ஒரு பருவ கால ஆறு ஆகும். இந்த ஆறு ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி, மேற்கு தெற்காக பாய்ந்து, செங்கம் அருகில் வடகிழக்காகத் திரும்பி மாவட்டத்தின் முழு நீளத்துக்கும் பாய்ந்து பயனளிக்கிறது. செய்யாறு ஆற்றில் ஓடும் நீரை விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர்.
செய்யாறு ஆற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் இந்த ஆற்றின் நிலையோ பரிதாபமாக உள்ளது. இன்றைக்கு முள்காடாகவும், கழிவுநீர் தேங்குமிடமாகவும் மாறியுள்ளது இந்த ஆறு. இதை சுத்தம் செய்ய பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை என்கின்றனர் இந்த பகுதி மக்கள்.
இந்த அவலநிலையைப் போக்கி மீண்டும் ஆற்றை மீட்டெடுக்க மக்களே களமிறங்கியுள்ளனர். இதற்காக செங்கம் பகுதியில் வாட்ஸ் அப் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, மாசுபட்டுள்ள செய்யாற்றை சீரமைக்க வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் ஏரளாமான பொது மக்கள், பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சனிக்கிழமை காலையில் ஒருங்கிணைந்த இப்பகுதி விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள் அனைவரும் செய்யாறு ஆற்றை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் வறண்டு காணப்படும் செய்யாறு ஆறு வளம் பெறும் என அவர்கள் நம்பிக்கையுடன் தூய்மை படுத்தி வருகின்றனர்.
படங்கள்- தகவல்: டாக்டர் ஸ்ரீதர் முருகையன்