போலி டாக்டர்கள் அதிகரிப்பு... தவறான மருந்துகளால் பக்கவாத பாதிப்பு... கிராம மக்களிடையே பீதி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரோடு விளையாடும் போலி டாக்டர்களை களையெடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவடடம் சிவகிரி அருகே ராயபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ரஷ்யாவில் மருத்துவம் படித்து விட்டு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தேர்வை எழுதாமல் விதிகளை மீறி சிகிச்சை அளித்த டாக்டர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மருத்துவமனைக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குலம், வாசுதேவநல்லூர், சிவகரி, சங்கரன்கோவில், தச்சநல்லூர், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், ஏரல், திருச்செந்தூர், நாலுமாவடி, உடன்குடி சாயபுரம் ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் குவிந்துள்ளன.
குறைவான கட்டணம்...
தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் குறைந்தபட்சம் ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிப்பதால் படிப்பறிவில்லாத ஏழைகள் மட்டுமின்றி படித்தவர்களும் கிராமத்தில் உள்ள போலி டாக்டர்களிடம் செல்கின்றனர்.
போலி மருத்துவர்கள்...
இவர்களில் சிலர் ஹோமியோபதி மற்றும் சித்தா மருந்து தயாரிப்பதற்கான படிப்புகளைப் படித்து விட்டு கிராமப்புறங்களில் கிளினிக் தொடங்கி மருத்துவம் பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வருவோர்க்கு அலோபதி முறையில் மருத்துவம் பார்க்கின்றனர்.
மக்கள் பாதிப்பு...
இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு கிட்னி பாதிக்கப்பட்டு நரம்பு தளர்ச்சி நோயால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரத்தில் கை, கால் வலிகளுக்கு சில போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
நடவடிக்கை கோரி...
இதனால் பொது மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது. உண்மையான மருத்துவர்கள் யார், போலி மருத்துவர்கள் யார் என்பது தெரியாமல் சிகிச்சைப் பெற முடியாமல் அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து போலி மருத்துவர்களைப் போலீசார் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.