40 கி.மீ சுற்றளவை அதிர வைக்கும் வெடிசப்தம்.. திண்டுக்கல் ரெங்கமலை ரகசியம் தான் என்ன?
திண்டுக்கல் ரெங்கமலையில் நடைபெறும் மத்திய அரசின் ஆய்வு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு அதிகாரிகள் ரெங்கமலை, கருமலையை குறி வைத்து ஆய்வு நடத்துகின்றனர். எதற்காக இந்த ஆய்வு என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த ரெங்கமலையில் சக்திவாய்ந்த வெடிபொருளை பயன்படுத்தியதால் அண்மையில் திண்டுக்கல் மாவட்டமே அதிர்ந்து போனது எனவும் கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நில அதிர்வு போல உணரப்பட்டது. அப்போது பயங்கர வெடிசப்தமும் கேட்டது.
40 கி.மீ. சுற்றளவுக்கு இந்த வெடிசப்தம் கேட்டது. இந்த வெடிசப்தம் எதனால் ஏற்பட்டது என்பதுதான் புரியாத புதிராக இருந்து வருகிறது.
ஆனால் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எல்லையில் உள்ள ரெங்கமலை பகுதியில் தான் இந்த வெடிசப்தம் உருவானதாக கூறப்படுகிறது. ரெங்கமலை மற்றும் அதன் அருகே உள்ள கருமலை பகுதியில் 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு திடீரென பட்டா நிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் அடையாள கற்களை நட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இம்மலை பகுதிகளில் துத்தநாகம், செம்பு, சுண்ணாம்புக் கல் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வுக்காக அவ்வப்போது இந்த மலைகளில் குட்டி விமானங்கள் தாழ்வாக பறப்பது ஏற்கனவே பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தையே அதிர வைக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிபொருளை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்தியிருப்பது கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரெங்கமலையில் என்னதான் நடக்கிறது? என்பதை மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் மத்திய அரசும் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த ஆய்வுதான் நடக்கிறது.. இதைத்தான் செய்யப்போகிறோம் என மக்களுக்கு தெரியப்படுத்துவதில் தயக்கம் எனில் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த திட்டமிடுகிறார்களோ எனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.