செல்லாத ரூபாய் பிரச்சனை... பொங்கிய மக்கள்.. ரிசர்வ் வங்கியில் ஆவேச முற்றுகை
சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாறித்தர வேண்டும் எனக்கூறி அவர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் இன்று திடீரென முற்றுகையிட்டனர். என்.ஆர்.ஐக்கள் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.
மோடியின் இந்த ரூபாய் நோட்டு மதிப்பு ரத்து நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் அன்றாட செலவுக்கே பணமின்றி தவித்தனர். மோடியின் அறிவிப்பு வந்து 2 மாதங்கள் ஆகியும் மக்களின் பணப்பிரச்சனை இன்னும் தீர்ந்தப்பாடில்லை.
பழைய நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான தேதியை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்தது.
இந்நிலையில் சென்னை ரிசர்வ் வங்கியில் என்.ஆர்.ஐக்கள் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தங்களின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி வங்கியை முற்றுகையிட்டனர்.
மத்திய அரசு அறிவித்தபடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.