ஆனைகட்டி அருகே புள்ளிமானை விரட்டி கடித்து குதறிய நாய்கள்.. பொதுமக்கள் மீட்டு சிகிச்சை!
நாய்கள் கடித்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டனர்.
கோவை: ஆனைகட்டி அரசு பள்ளி அருகே நாய்கள் கடித்த புள்ளி மானை மீட்ட பொதுமக்கள்..வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கோவை: ஆனைகட்டி அரசு பள்ளி அருகே நாய்கள் கடித்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டுள்ளனர். அத்துடன், தகவல் அளித்தும் தகவல் வனத்துறையினர் வராததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.
கோவை மாவட்டத்தின் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல விலங்குகள் இருக்கின்றன. விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை இரண்டறை வயதுடைய புள்ளிமான் ஒன்றினை, ஆனைகட்டி அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி அருகே சில நாய்கள் துரத்தி வந்துள்ளன. அத்துடன் புள்ளிமானை கடித்து குதறி எடுத்தன. இதில் மானின் காலில் பலமான காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மானை மீட்டு அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளித்துள்ளனர். வனத்துறைக்கு மான் அடிபட்டதை பார்த்தவுடன் தகவல் சொல்லியுள்ளனர். வனத்துறையும் "நீங்களே மானை வைத்திருங்கள், நாங்கள் வந்து வாங்கிக்கொள்கிறோம்" என சொல்லி 5 மணி நேரமாகியும் வரவில்லை என்று கூறியதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து அலட்சியமாக செயல்படும் வனத்துறை ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.