வண்டலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... வரிசை கட்டிய பிளக்ஸ் பேனர்களால் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம்: வண்டலூரில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சி மாவட்டம் வண்டலூர் அருகே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அரசு விழா நடக்கிறது.
இந்த விழாவில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களையும் கட்டாயப்படுத்தி கலந்துகொள்ளச் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் குரோம்பேட்டை முதல் வண்டலூர் வரை வரிசையாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களால் பலரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த பேனரை அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் வலியுறுத்தலாகும்.