நெல்லை: கேரளா மீன்கழிவுகளை கொட்ட வந்த லாரி... சோதனை சாவடியில் மடக்கி பிடித்த பொதுமக்கள்
நெல்லை அருகே மீன் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
நெல்லை: நெல்லை அருகே மீன் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொது மக்கள் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.
தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. கேரள மக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்களான பால் முதல் சிமிண்ட் வரை தமிழகத்திலிருந்து செல்கிறது.
இவ்வாறு செல்லும் லாரிகள் திரும்ப வரும் போது கேரள இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் கொட்டுவது வாடிக்கையாகி வருகின்றது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் தோல் நோய் மற்றும் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வரும் போது சோதனை சாவடியில் லாரிகள் பிடிபட்டால் கேரளாகவுக்கே திருப்பி அனுப்பும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் இரவு 8 மணி அளவில் கேரளாவில் இருந்து நெல்லை மாவட்ட எல்லைக்குள் நுழைந்த ஒரு லாரியில் இருந்து தூர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த பொது மக்கள் அருகில் சென்று பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தனர். அதில் புழுக்கள் கொத்து கொத்தாக ரோட்டில் விழுந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக புளியரை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக களத்தில் குதித்த போலீசார் லாரியை புளியரை போக்குவரத்து சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்தனர்.
லாரியை பணகுடியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் ஓட்டி வந்ததும் அதில் மீன் கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் கேரளா அங்கிருந்து கழிவுகளை கொட்டுவதற்கு தமிழகத்தை குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகிறது. தமிழக லாரி டிரைவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு கழிவுகளை ஏற்றிக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.