சகாயம்,சீமானுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.. நடிகர் வேண்டுகோள்!
ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சீமான் ஆகியோர் மக்களுக்கு உண்மையாக போராடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சீமான் ஆகியோர் மக்களுக்கு உண்மையாக போராடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மக்கள் வாயப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசும் நிலையில் மாநில அரசு இல்லை என்று குற்றம்சாட்டினார்.
மத்திய அரசுக்கு கைகூலியாக மாநில அரசு செயல்படுகிறது என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறினார். தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டை நல்ல தமிழர்களே ஆளவேண்டும் என்றும் மன்சூர் அலிகான் கூறினார். மக்களுக்காக உண்மையாக போராடக்கூடிய சகாயம்,சீமான் போன்றவர்களுக்கு மக்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழனின் அடையாளமாக இருக்கக்கூடிய கீழடியை மறைக்க நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் எடுபடாது என்றார். நெடுவாசல்,கதிராமங்கலம் போன்ற இடங்களில் முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மூலம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும இல்லையென்றால் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் எச்சரித்தார்.