குடும்ப அட்டைதாரர்களை மசாலா பொடி வாங்க வற்புறுத்துவதா? ஈரோட்டில் ரேஷன் கடை முற்றுகை
ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: ஈரோட்டில் குடும்ப அட்டைதாரர்களை மசாலா பொடி வாங்க வற்புறுத்தும், நியாயவிலை கடையினை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு வளையகாரவீதியில் தந்தை பெரியார் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலை கடை உள்ளது. இந்த கடையின் மூலம் 2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த கடையில் விற்பனையாளர் ஒருவர் மட்டுமே உள்ளதால் பொருட்களை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது என்பது பொதுமக்களின் புகாராகும். கூலி வேலைக்கு செல்லும் தாங்கள் வேலைக்கு செல்லாமல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் குடும்ப அட்டைதாரர்களை மசாலா பொடி வாங்க வற்புறுத்துவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நியாயவிலை கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட கடைக்கு கூடுதலாக ஊழியர்களை நியமிக்க வேண்டும், மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.