கன்னியாகுமரி அருகே பொய்வழக்கை கண்டித்து பொதுமக்கள் காவல்நிலையம் முற்றுகை... பரபரப்பு
தங்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அனுமதி இன்றி கற்கள் கொண்டு சென்ற வாகனங்களை சிறைபிடித்த தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறுமாறு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அனுமதி இன்றி தொடர்ந்து கற்கள் கொண்டு செல்லும் நிலையில், இந்த வாகனங்களை பொதுமக்கள் மற்றும் தமிழக லாரி ஓட்டுநர்கள் அவ்வப்போது சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில் நேற்று வெண்டலிகோடு பகுதியில் இரு வாகனங்களை சிறைபிடித்து குலசேகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீஸார் சிறைபிடித்த பொதுமக்கள் 10 பேர் மீதுவழக்கு பதிவு செய்தனர். எனவே கைது செய்தவர்களை விடுவிக்க கேட்டும், தங்கள் மீது பொய் வழக்கை வாபஸ் பெற கேட்டும் குலசேகரம் காவல் நிலையத்தை பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீஸார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த முற்றுகையினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.