பேருந்து கட்டண உயர்வோ பல மடங்கு ரூபாயில்... குறைப்போ சொற்ப 'காசுகளில்'... கொந்தளிக்கும் மக்கள்
பேருந்து கட்டணத்தை பல மடங்கு ரூபாய் உயர்த்தியது தமிழக அரசு. ஆனால் தற்போது பைசாக்களில்தான் கட்டணத்தை குறைத்துள்ளது.
Recommended Video
சென்னை: வரலாறு காணாத வகையில் பல மடங்கு ரூபாய் பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு தற்போது வெறும் சொற்ப காசுகளில் கட்டண குறைப்பு என அறிவித்திருப்பது தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்குவதால் கடுமையான பேருந்து கட்டண உயர்வை மக்கள் தலைமையில் சுமத்தியது தமிழக அரசு. பெரும்பாலான இடங்களில் 100% கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இதனால் கடந்த 2 வாரங்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு இனி படிக்க செல்ல முடியாதோ என்ற கோபத்தில் வீதிகளில் இறங்கினர்.
தீவிரமாகும் என எச்சரிக்கை
மாணவர்களின் உக்கிர போராட்டத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் குதித்துள்ளன. நாளை திங்கள்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
கட்டண குறைப்பு அறிவிப்பு
அதேபோல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறை நிரப்பும் போராட்டத்தை கூட்டாக நடத்துவோம் என அறிவித்திருந்தன. இதனை சமாளிக்கும் வகையில் திடீரென இன்று பேருந்து கட்டண குறைப்பு என்கிற செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உயர்வு மட்டும் ரூபாய்களில்..
ஆனால் கட்டண குறைப்பு என்பது வெறும் 2 பைசா, 4 பைசா என்கிற அளவில்தான் உள்ளது. பேருந்து கட்டணங்களை பலமடங்கு ரூபாயில் உயர்த்தி மக்களை பெரும் துயரத்துக்குள்ளாக்கியது அரசு.
கொந்தளிக்கும் பொதுமக்கள்
தற்போது வெறும் சொற்ப காசுகளில் கட்டண குறைப்பு என்பது மக்களுக்கு எந்த ஒரு பயனையும் தரப்போவது இல்லை.. பொதுமக்களின் பெரும் சுமையில் ஒரு துளிதான் குறையும். இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.