டிக்கெட்டுகள் காலி.. சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்க வலுக்கிறது கோரிக்கை
பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள வெளியூர் மக்கள் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கல்வி, வேலை, தொழில் என பல காரணங்களுக்காக மக்கள் சென்னையில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
பொங்கள் திருநாளுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் மக்கள் குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் என ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
அறிவிப்பு வராததால் குழப்பம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கிவிட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளி வராமல் இருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவிர்க்கப்பட்ட கூட்ட நெரிசல்
பொங்கல் திருநாளுக்காக மக்கள் ஒரே அடியாக சொந்த ஊர்களுக்கு செல்வதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்படும். சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் இந்த நெரிசல் தவிர்க்கப்பட்டு வந்தது.
விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் பாண்டியன், வைகை, நெல்லை, அனந்தபுரி, முத்துநகர், கன்னியாகுமரி, செந்தூர், பொதிகை, குருவாயூர், ராமேசுவரம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டன. ஒவ்வொரு ரெயில்களிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது.
நீளும் காத்திருப்பு பட்டியல்
அந்தவகையில் மதுரை நோக்கி செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 12, 13ஆம் தேதிகளில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 400 வரை உள்ளது. இதேபோல் வைகை எக்ஸ்பிரஸில் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 12 மற்றும் 13ஆம் தேதிகளில் காத்திருப்பவர்களின எண்ணிக்கை 300 வரை உள்ளது.
சிறப்பு ரயில்கள் - கோரிக்கை
நெல்லை , அனந்தபுரி , முத்துநகர் , கன்னியாகுமரி , செந்தூர், பொதிகை , குருவாயூர் ராமேசுவரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. காத்திருப்பு பட்டியலும் மிக நீளமாக உள்ளது. இந்நிலையில் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் பயணிகள் வருத்தமடைந்துள்ளனர். சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட் வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.