புதுச்சேரி தேர்தல் 2016: அமாவாசை வரை கூட்டணி அறிவிப்பு கிடையாது... முதல்வர் ரங்கசாமி முடிவு!
புதுச்சேரி: சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாக தயாராகி வரும் நிலையில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தரப்பு அமைதியாக இருக்கிறது. யாருடன் கூட்டணி? வேட்பாளர்கள் யார்? சட்டசபைத் தேர்தல் எப்படி எதிர்கொள்வது என்று கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி எந்த ஆலோசனையும் செய்யாமல் இருப்பது என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களையும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 7 தொகுதிகளையும் அதிமுக 1 தொகுதியையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. இந்த கருத்துக்கணிப்பும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை கதிகலங்க வைத்துள்ளது.
அதே நேரத்தில் இதுவரை 20 ஜோதிடர்களிடம், தேர்தல் பற்றி ஆலோசனை கேட்டுள்ள ரங்கசாமி, ஒவ்வொரு கோவிலாக புனித யாத்திரை செல்லத் தொடங்கியுள்ளதால் பாஜகவும், அதிமுகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகிவிட்டனர்.
அழுக்குசாமி தொடங்கி
முதல்வர் ரங்கசாமியின் குல தெய்வம் விக்கிரவாண்டி அருகே உள்ளது. குலதெய்வத்தை கும்பிட்ட ரங்கசாமி, பொள்ளாச்சி அருகே அழுக்கு சாமி சித்தர் கோயில், திருப்பதி, ஸ்ரீரங்கம் என ஆன்மீக பயணம் செய்தார்.
தீர்த்த யாத்திரை
திருச்செந்துார் முருகன், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், வைரவன்பட்டி பைரவன் கோவில், அய்யவாடி பிரத்தியங்கிரா தேவி உள்ளிட்ட கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று முதல்வராகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வருகிறார்.
எதிர்கட்சி முகாம்
காங்கிரஸ் - தி.மு.க.இடையே ஒரு சுற்று பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.தி.மு.க. அமைப்பாளர்கள், தங்களது தொகுதியில் வீடு வீடாக திண்ணை பிரசாரத்தில் முழு மூச்சாக இறங்கி உள்ளனர்.
30 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியல்
அ.தி.மு.க.வினர் விருப்ப மனு அளித்துவிட்டு, தங்களது தொகுதிகளில் தேர்தல் வேலைகளை துவக்கி விட்டனர். பாஜகவும் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்துவிட்டது.
பொறுமையா இருங்க
ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரசில் இதுவரை விருப்ப மனு பெறுதல், நேர்காணல் போன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் கூட துவங்கவில்லை. யாருடன் கூட்டணி என்று கேட்டால் 'தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கே. என்ன அவசரம். பொறுமையா இருங்க' என, கூறிவிட்டு அடுத்து எந்த கோவிலுக்கு போகலாம் என்று யோசிக்கிறாராம்.
அதிமுக தரப்பில் ஆலோசனை
புதுச்சேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், என்.ஆர்.காங்கிரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், 30ல் 15 தொகுதிகள், அமைச்சரவையில் சரிபாதி பங்கு, நியமன எம்.எல்.ஏ கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் ரங்கசாமி தீர்த்தயாத்திரை கிளம்பி விட்டார்.
தனித்து போட்டி?
இதனையடுத்து கடந்த 25ம் தேதி, புதுச்சேரி மாநில நிர்வாகிகளை, போயஸ்கார்டனுக்கு அழைத்த ஜெயலலிதா, 'யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அனைத்துதொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யுங்கள் என கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனித்து போட்டியிடும் முடிவிற்கு அ.தி.மு.க.தயாராகி விட்டதையே இது தெரிவிக்கிறது.
2011 வரலாறு மீண்டும் திரும்பும்
தமிழகம், புதுச்சேரிக்கும் சேர்த்து ஏப்ரல் 11ம் தேதி வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் அறிந்தும், முதல்வர் ரங்கசாமி அமைதியாகவே இருக்கிறார். கடந்த 2011 தேர்தலில் 30 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவித்த பிறகு, என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. அதுபோல் இப்போது நடக்கும் என்ற நம்பிக்கையில் ரங்கசாமி இருக்கிறாரோ என்னவோ?
அமாவாசை வரை மவுனம்
ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்களையும், சிறப்பு பூஜைகளையும் ரங்கசாமி செய்து வருகிறார். மேலும், தேய்பிறை என்பதால், வரும் 7ம் தேதி அமாவாசை வரை, கூட்டணி தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம், அமாவாசைக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனவும் ஜோதிடர்கள், கூறியுள்ளனராம். இதனால்தான் ரங்கசாமி மவுனம் காக்கிறார் என்கின்றனர் என்.ஆர். காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள்.
அமாவாசைக்கு பிறகாவது மவுனம் கலைவாரா ரங்கசாமி பார்க்கலாம்.