திருநாகேஸ்வரம் ராகு தலத்தில் ரங்கசாமி... நாராயணசாமிக்கு அர்ச்சனை
தஞ்சாவூர்: முதல்வராக இருந்த ரங்கசாமி எதிர்கட்சித்தலைவராக மாறிய பின்னரும் கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்வதை விடவில்லை. எல்லாம் பதவிபடுத்தும் பாடு என்கின்றனர். திருநாகேஸ்வரம் வந்து ராகு பகவானை தரிசனம் செய்து வழிபட்டுள்ளார் ரங்கசாமி. ஆனால் அர்ச்சனை நடந்தது என்னவோ முதல்வர் நாராயணசாமிக்காம்.
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில், புகழ்பெற்ற ராகு ஸ்தலம் உள்ளது. ராகு என்றால், நிழல் அல்லது இருட்டைக் குறிப்பதாகும். அதாவது, வாழ்க்கையில் இருட்டைப்போக்கி, வெளிச்சம் பரவுவதற்கான இடம்தான் ராகு ஸ்தலம் என்பது. மேலும், பீடை, தீட்டு போன்றவற்றை போக்குவதற்கும் இந்த ராகு ஸ்தலம் போவார்கள்.
இந்தக் கோவிலுக்கு, புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனம், திருநாகேஸ்வரம், அய்யாவாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆலயங்களில் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி சட்டசபை எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ரங்கசாமி. சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் திருநாகேஸ்வரம் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்தார் ரங்கசாமி.
அவருடன் சென்றவர்கள் கோயில் குருக்களிடம், சி.எம். வருகிறார், சி.எம். வருகிறார் என்று சொன்னதும், எந்த ஊர் சி.எம்ம்பா எனக் கேட்டவே, புதுச்சேரி சி.எம். என்றதும், ஆரத்தி தட்டை காண்பித்த குருக்கள் நாராயணசாமி நமோ, நாராயணசாமி நமோ என அர்ச்சனை செய்தாராம்.
உடனே ரங்கசாமியுடன் வந்தவர்கள் குருக்களிடம், சாமி, நாராயணசாமி இல்லை, ரங்கசாமி என்றனர். உடனே குருக்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிதானே என்று கேட்க, இல்லங்க, இவர் முன்னாள் முதல்வர் என்று சொன்னதும், தெளிவா சொல்லுங்கப்பா என்று கூறிய குருக்கள், ரங்கசாமி நமோ, ரங்கசாமி நமோ என்று அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுத்தாரம்.