10 நிமிடத்தில் முடிந்த புதுச்சேரி சட்டசபை கூட்டம்… ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டம் 10 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. கூட்டத்தை காலவரையின்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சபாநாயகர் சபாபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் தட்சிணாமூர்த்தி, ஹஜ் யாத்ரீகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை நகலை அமைச்சர் தியாகராஜன் வாசிக்க தொடங்கினார்.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் புருஷோத்தமன், அன்பழகன் ஆகியோர் குறுக்கிட்டு, " இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைகோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதைபின்பற்றி புதுச்சேரியில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இது எதிர்பானது அல்ல. தமிழர்களுக்கானது" என்றனர்.
இதற்கிடையே அரசு கொறடா பதவியை ராஜிநாமா செய்து கடிதம் தந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ நேரு, "சட்டசபையை நாட்கள் நடத்த கடிதம் தந்தேன். அதற்கு பதில் தேவை" என்று தொடர்ந்து பேசினார்.
அதற்கு சபாநாயகர் சபாபதி, "கடிதத்தை எங்கு தந்தீர்களோ அங்கு பதில் தருகிறேன். சட்டசபையை கூட்டுவதை முடிவு எடுக்க குழு இருக்கிறது. உங்கள் கோபத்தை இங்கு காட்டாதீர்கள்" என்றார்.
அப்போது அமைச்சர் தியாகராஜன் அறிவிக்கை நகலை படித்து முடித்தார். இதையடுத்து சட்டசபையை காலவரையன்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார். சட்டப்பேரவை கூட்டம் 9 நிமிடங்களில் நிறைவடைந்தது.
இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, "சட்டசபபையில் ஜனநாயகமே இல்லை. இதை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றார். அப்துல் கலாம் இரங்கலுக்கு கட்சியினரை பேச அனுமதிக்கவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தில் அவசரமாக சட்டசபை நிகழ்வுகளை முடித்துள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக நாடகமாடுகிறது" என்றும் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆளுங்கட்சி எம்எல்ஏவான நேரு, "சாலைவசதி தொடங்கி பலதுறைகளில் அரசு செயல்பாடு மோசமாக உள்ளது. சட்டசபையில் இன்று நடந்த கூட்டத்தால் மக்களுக்கு பயன் உள்ளதா என்று எண்ணி பார்க்க வேண்டும். மக்கள்பிரச்சினைகளுக்காக நாள்தோறும் போராட உள்ளேன்" என்றார்.
அதே நேரத்தில் வைத்தியலிங்கம் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அதிமுக சட்டசபை துணைத்தலைவர் எம்எல்ஏ அன்பழகன், "7 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ்தான் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஆறு எம்எல்ஏக்கள் கையெழுத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வராமல் காங்கிரஸ் இருப்பது ஏன் என்பதை எதிர்க்கட்சித்தலைவர் தெரிவிக்க வேண்டும். அதிமுகதான் மக்கள் பிரச்சினைக்களுக்காக நாலரை ஆண்டுகளாக போராடுகிறது" என்று குறிப்பிட்டார்.
ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களே போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.