புதுச்சேரியில் ம.ந கூட்டணியுடன் சேருமா என்.ஆர். காங்கிரஸ்?
புதுவை: புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரசுடன் மக்கள் நல கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதற்காக தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்கள் நலக்கூட்டணி இனி விஜயகாந்த் அணி என்று அறிவித்த ஒருங்கிணைப்பாளர் வைகோ, கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. முதல்வர் ரங்கசாமியின் தலைமையிலான ஆட்சியை அகற்றி புதுவையில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது.
அதே நேரத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த ரங்கசாமி புதுவையில் ஆட்சியைக் கைப்பற்றினார். இம்முறையும் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சி செய்து வருகிறார். கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாக அழுக்கு சாமி, அப்பா பயித்தியம் சித்தர், திருமலை ஏழுமலையான் தரிசனம் என சென்று வந்துள்ளார்.
ஆனால் கூட்டணி யாருடன் என்று அறிவிக்காத காரணத்தார் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல்வர் ரங்கசாமி மீது அதிருப்தி அடைந்த அங்காளன் எம்.எல்.ஏ சில நாள்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸில் இருந்து என்.ரங்கசாமி விலகி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போது, அந்தக் கட்சியில் இணைந்த அங்காளன். பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திருபுவனை தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். இந்த நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.
ரங்கசாமிக்கு கட்சிக்கு உள்ளே மட்டுமல்ல வெளியிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என புதுச்சேரியின் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மக்கள் நலக்கூட்டணி
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், புதுவையில் மக்கள் நலக் கூட்டணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொள்கையுடைய மாற்று சக்தியாக கூட்டணி உருவெடுத்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்கிறோம். புதுவையிலும் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படும்.
முதல்வர் ரங்கசாமிக்கு எதிர்ப்பு
தற்போது ஒரு என்.ஆர். காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் காங்கிரஸ் இணைந்துள்ளதாலும், வெளியிலிருந்து ஆதரவளித்த மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் ஆதரவை விலக்கிக் கொண்டதாலும் என்.ஆர். காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே தார்மீக பொறுப்பேற்று ரங்கசாமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலை சந்திக்க வேண்டும்.
பேச்சு வார்த்தை
மக்கள் நலக் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம். மக்கள் நல கூட்டணியில் முதல்வர் பதவிக்கு தகுதியான நபர்கள் உள்ளனர். கொள்கை அடிப்படையில் முதல்வர் ரங்கசாமி கூட்டணிக்கு வந்தால் ஏற்போம் என்றும் அவர் கூறினார்.
திருமாவளவன் கருத்து
இந்த நிலையில் புதுவை மாநில சட்டசபைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி ஆளும் என்.ஆர்.காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தனியார் டி.வி.யில் நடந்த விவாத மேடையில் பேசிய திருமாவளவன் இதனை தெரிவித்தார்.
ரங்கசாமி மவுனம்
கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்காத என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான ரங்கசாமி இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.