புதுவையில் தொடரும் இழுபறி... யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை?
புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி இம்முறை அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது.
மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும்.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 'வெப்' கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்படுகிறது.
இதுவரை அங்கு 9 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இதுதவிர, தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் தொகுதிகளில் 8 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணியும், என்.ஆர்.காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இது தவிர சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.
இதன் அடிப்படையில் மொத்தமாக பார்க்கையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும், ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை முன்னிலை வகித்து வருகின்றன.
இதன் அடிப்படையில் பார்த்தால், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஒருவேளை என்.ஆர்.காங்கிரஸும், அதிமுகவும் கூட்டணி அமைத்தால் அது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க சவாலாகவே அமையும்.
இதனால் வழக்கம் போல, இம்முறையும் அங்கு குதிரை பேரம் நடக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.