புதுவையில் சுற்றுலா வந்த பெண்ணிடம் சில்மிஷம்...கட்டியணைத்து முத்தம் .. ஆட்டோ டிரைவர் அடாவடி
புதுவைக்கு சுற்றுலா வந்த ஐதராபாத்தை சேர்ந்த பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் கட்டியணைத்து முத்தம் கொடுத்து அத்துமீறியுள்ளார்.
புதுச்சேரி: சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஐதராபாத்தை 26 வயது இளம்பெண்ணிடம் ஆட்டோ ஒட்டுனர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சுவாதி, ஜோதி, தனுஸ்ரீ 3 பேரும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்துள்ளனர். புதுவையில் உள்ள ஒரு விடுதி ஒன்றில் தங்கி இருந்த அவர்கள் புதுவையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.
நேற்று இரவு உணவு அருந்திவிட்டு அண்ணா சாலையில் ஜாலியாக பேசிக் கொண்டு வந்துள்ளனர் 3 பேரும். அப்போது ஆட்டோவுடன் நின்றிருந்த இளைஞர் திடீரென சுவாதியை வழிமறித்து அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.
தப்பியோட்டம்
உடனே அந்த வாலிபர் ஆட்டோவுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆனால், அந்த பெண்கள் அந்த ஆட்டோ நம்பரை குறிப்பெடுத்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் ஒதியஞ்சாலை போலீசாரிடடும் புகார் அளித்துள்ளனர்.
கண்டுபிடிப்பு
இளம்பெண்கள் கொடுத்த ஆட்டோ நம்பரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த ஆட்டோ புதுவை சின்னையாபுரம் அக்கா சாமி கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
பிடிபட்ட ஆட்டோக்காரர்
இன்று காலை சுவாதிக்கு முத்தம் கொடுத்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது குடிபோதையில் தான் தவறாக நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்டாலினை கைது செய்த போலீசார் அவரது ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
அச்சப்பட வேண்டாம்
நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் இந்த அத்துமீறிய செயல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு யாரேனும் இடையூறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாநில போலீசார் உறுதியளித்துள்ளனர்.