கிரண் பேடியின் யோகா செஷன்.. நாராயணசாமி அன் கோ கூண்டோடு புறக்கணிப்பு
புதுச்சேரி: சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் பங்கேற்று யோகா பயிற்சிகளை செய்தார். ஆனால் முதல்வர் நாராயணசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒட்டுமொத்தமாக இந்த யோகா தின நிகழ்ச்சியை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி கடற்கரையில் உலக யோகா தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று காலை 6.30 மணிக்கு 34 பள்ளிகளைச் சேர்ந்த 4500 மாணவர்கள், 15 கல்லூரிகளைச் சேர்ந்த 700 மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 800 மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.
புறக்கணித்த நாராயணசாமி
இதில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கான அரசு அழைப்பிதழில் முதல்வர் நாராயணசாமியும் அமைச்சர்களும் பங்கேற்பர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் யாருமே பங்கேற்கவில்லை.
ஏனாம் டூ டெல்லி
ஏனாம் வளர்ச்சி திட்ட ஆய்வுக்காக முதல்வர் நாராயணசாமியும் அமைச்சர்களும் சென்றுவிட்டனராம். அங்கிருந்தபடியே அவர்கள் டெல்லி செல்கின்றனராம்.
பிரதமர் மோடியை நாளையும் மத்திய அமைச்சர்களை நாளை மறுநாளும் நாராயணசாமியும் அமைச்சர்களும் சந்திக்க உள்ளனர். இருப்பினும் ஆளுநர் கிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி அரசு விழாக்களில் பங்கேற்பதை தொடர்ந்து தவிர்க்கிறார் என்றே கூறப்படுகிறது.
2-வது விழா
ஏற்கனவே ரத்ததானம் செய்தோரை கவுரவிக்கும் முதல் அரசு விழாவிலும் நாராயணசாமி பங்கேற்கவில்லை. தற்போது 2-வது முறையாக யோகா தின விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றன புதுவை வட்டாரங்கள்.
அரசியல் வேண்டாமே...
இதனிடையே முதல்வர் நாராயணசாமி புறக்கணித்தது குறித்து என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், யோகா தினத்தில் அரசியல் வேண்டாம். நான் எனது பணியை செய்கிறேன். அதை எவ்வாறு செய்வது என்பதில்தான் எனது கவனமுள்ளது எனக் கூறியுள்ளார்.