சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: புதுச்சேரி நீதிமன்றம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர் உள்பட 15 பேர் ஆஜரானார்கள். அப்பு, ரஜினிகாந்த், ஆர்.டி.பழனி உள்பட 8 பேர் ஆஜராவில்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கதிரவன் இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பு வழங்க ஆட்சேபணை எதுவும் தெரிவிக்க விரும்புகிறீர்களா என்று சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மாவிடம் நீதிபதி கேள்வி கேட்டார்.
புதுவை நீதிமன்றம்
இதற்கு பதில் அளித்த ஆனந்த் சர்மா, வழக்கில் தீர்ப்பு வழங்க ஆட்சேபணை இல்லை என்றார். விசாரணை முடிவடைந்த நிலையில், வரும் 12ஆம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி முருகன் அறிவித்ததோடு, அன்றைய தினம் குற்றம்சாற்றப்பட்டுள்ள 23 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நவம்பர் 27ல் தீர்ப்பு
அதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கொல்லப்பட்ட சங்கரராமன் தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.