எங்க தலைவனை சந்திக்காம எப்பூடி.. ரங்கசாமி கட்சிக்கு பெப்பே காட்டும் புதுவை தேமுதிக!
புதுச்சேரி: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸுக்கும் இடைய லடாய் வெடித்துள்ளது.
சென்னைக்குப் போய் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்காததை வைத்து பஞ்சாயத்துக் கூட்டியுள்ளதாம் புதுவை தேமுதிக.
எங்க தலைவருக்கு உரிய மரியாதையைத் தராத என்.ஆர். காங்கிரஸுக்கு நாங்கள் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் ஆதரவு தர மாட்டோம் என்று அவர்கள் கூறி விட்டனர். இதனால் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சங்கடப்பட்டு நிற்கிறதாம்.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி
பாஜக கூட்டணியில் இடம் பெற்ற என். ஆர். காங்கிரஸ் புதுச்சேரி தொகுதியை வாங்கி அங்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
ஆதரவு தர மாட்டோம்- தேமுதிக
இந்த நிலையில் என்.ஆ்ர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தர மாட்டோம் என்று தேமுதிக கூறி விட்டது.
விஜயகாந்த்தைப் பார்க்கலையே...
இதுகுறித்து தேமுதிக மாநிலச் செயலர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் பாஜக கூட்டணியில் உள்ளோம். அண்மையில் சென்னை சென்று ராஜ்நாத்சிங்கை சந்தித்த புதுவை முதல்வர் ரங்கசாமி, இக்கூட்டணியில் பெரிய கட்சியாக உள்ள தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தை சந்திக்கவில்லை.
மதிக்க மாட்டோம்
இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் புதுச்சேரி தேமுதிக அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் முதலில் எங்கள் கட்சித் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எங்கள் தலைவரை மதிக்காதவர்களை நாங்கள் மதிக்கமாட்டோம். இதை கட்சித் தலைமையிடமும் தெரிவித்துள்ளோம்.
ஜெயலலிதாவுக்கு மட்டும் நன்றி தெரிவித்தாரே...
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தோம். வென்ற பிறகு ஜெயலலிதாவுக்கு ரங்கசாமி நன்றி தெரிவித்தார். எங்கள் கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிக்க அவர் மறந்து விட்டார்.
கடந்த முறை ஏமாந்தோம்.. இந்த முறை ஏமாற மாட்டோம்
கடந்த முறை நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இம்முறை ஏமாற மாட்டோம். சனிக்கிழமையும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் போனில் பேசினர். நாங்கள் தலைமையை சந்திக்க கூறிவிட்டோம். விரைவில் அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம் என்றார்.
பாமக - பாஜக சந்திப்பு
இந்த நிலையில், புதுச்சேரியில் தனியாக போட்டியிடுவோம் என்று முன்பு அறிவித்திருந்த பாமக நிர்வாகிகள், கட்சியின்மாநிலச் செயலாளர் அனந்தராமன் தலைமையில் பாஜக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினர்.
ஓரிரு நாளில் நிலைமை தெளிவாகும்
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன் கூறுகையில், மரியாதை நிமித்தமாக பாமக நிர்வாகிகள் சந்தித்தனர். புதுச்சேரியில் எங்கள் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக தெளிவாக கூறினோம். புதுச்சேரி தொகுதி குறித்த தங்களது நிலை பற்றி பாமக ஓரிரு நாள்களில் தெளிவுபடுத்தும்.
வேலையை ஆரம்பிப்போம்
புதுச்சேரியில் பாஜக கூட்டணியினர் தேர்தல் பணியை தொடங்குவர். ஓரிரு நாள்களில் இறுதி முடிவு எடுப்போம் என்றார்.
ஆனால் அனந்தராமனை வேட்பாளராக அறிவித்துள்ள பாமக அவரை வாபஸ் பெறுமா என்பது தெரியவில்லை. ஏற்கனவே ரங்கசாமியுடன், அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.