கல்யாணத்திற்கு வற்புறுத்தினாள்.. குழந்தையோடு கொன்று புதைத்தேன் - புதுச்சேரி பூ வியாபாரி
புதுச்சேரியில் பூ வியாபாரி ஒருவர், இளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொன்று புதைத்து விட்டார்.
Recommended Video
புதுச்சேரி: திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய காதலியை குழந்தையோடு கொன்று புதைத்து விட்டதாக பூ வியாபாரி ஒருவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான கிளியனூர் போலீஸ் சரகம் சித்தேரியில் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது. இந்த குழந்தையின் சடலத்தை வைத்து போலீஸ் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
புதுவை வானரப்பேட்டையை சேர்ந்தவர் குணவதி,37. பூ வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்துக்கு தேவையான பூக்கள் வாங்க புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு வந்த போது அங்கு பூ வியாபாரம் செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. குணவதியை விட பிரபாகரன் 5 வயது குறைவானவர்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிவந்தனர். சில சமயம் உறவில் ஈடுபட்டதில் குணவதி கர்ப்பம் அடைந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாகரனை குணவதி வற்புறுத்தினார். ஆனால் பிரபாகர் நழுவி வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின்னரே பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திருவண்ணாமலையில் இருப்பது குணவதிக்கு தெரியவந்தது.
திருமணமான நபருடன் பழக்கம்
அதிர்ச்சியடைந்த குணவதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து பிரபாகரனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதை விரும்பாத பிரபாகர், கடந்த 25ஆம் தேதி குணவதியை குழந்தையுடன் அழைத்துச்சென்றார். அதன்பின்னர் குணவதியும், குழந்தையும் வீடு திரும்பவில்லை.
போலீசில் புகார்
இதுகுறித்து குணவதியின் பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த சிலதினங்களுக்கு முன்பு கிளியனூர் போலீஸ் சரகம் சித்தேரியில் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது. அது குணவதியின் குழந்தைதான் என்பதை அவரது பெற்றோர்கள் உறுதிப்படுத்தினர்.
கைது செய்த போலீஸ்
இதைத்தொடர்ந்து குணவதியும் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். குணவதியின் காதலன் பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது குணவதியையும், குழந்தையையும் கொலை செய்து உடல்களை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
குணவதியுடன் தொடர்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் எனது சொந்த ஊர். புதுவையில் தங்கி இருந்து பூ வியாபாரம் செய்து வந்தேன். அப்போது குணவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக பழக்கம் நீடித்தது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் வற்புறுத்தினார்.
மனைவியிடம் கூறுவதாக மிரட்டல்
தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கடைக்கு அல்லது வீட்டுக்கு வந்து விடுவேன் என்று என்னை மிரட்டினார். அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டும் தொந்தரவு செய்தார்.
நானும் பணம் கொடுத்து வந்தேன். ஆனாலும் திருமணம் செய்ய கோரி வற்புறுத்தினார். ஒருகட்டத்தில் தனது குழந்தையுடன் சென்று எனது மனைவியிடம் என்னுடன் உள்ள தொடர்பு பற்றி சொல்லிவிடுவதாக கூறினார்.
கொன்று வீசினேன்
குணவதி மிரட்டியதால் கோரிமேடு பகுதியில் இருந்து குணவதியை குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கிளியனூர் சித்தேரிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு முதலில் குணவதியை கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை முட்புதரில் வீசினேன். பின்னர் குழந்தையையும் கழுத்தை இறுக்கி கொலைசெய்து உடலை சித்தேரியில் வீசி எறிந்தேன் என்றார்.
சித்தேரியில் குணவதி சடலம்
கொலை நடந்த சித்தேரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். குணவதியை கொலை செய்தது எப்படி? என்பது குறித்தும், உடல்களை வீசிய இடங்களையும் போலீசாரிடம் அவர் காண்பித்தார். அங்குள்ள முட்புதரில் இருந்து குணவதியின் உடலை அழுகிய நிலையில் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரபாகரனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறைச்சாலையில் போலீசார் அடைத்தனர்.
காதலன் என்று நம்பிய நிலையில் கயவனாக மாறி காதலியையும், குழந்தையையும் கொன்று வீசியுள்ளான் பிரபாகரன்.